Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வாட்ச்மேனின் மகனாக பிறந்த ரவீந்திர ஜடேஜா இன்று கிரிக்கெட் ஆல் ரவுண்டராக சாதனை படைப்பது எப்படி?

வாட்ச்மேனின் மகனாக பிறந்த ரவீந்திர ஜடேஜா இன்று கிரிக்கெட் ஆல் ரவுண்டராக சாதனை படைப்பது எப்படி?

Saturday April 01, 2017 , 3 min Read

ராஜ்புத் வம்சத்தை சேர்ந்த நடுத்தரக் குடும்பத்தில் வாட்ச்மேனுக்கு மகனாக பிறந்த அவர் இன்று பலர் அறிந்த பிரபலமாக வலம் வருகிறார். 17 வயது இருந்தபோதே தாயை இழந்து, அவரின் சகோதரி குடும்பச் சுமையை தன் தோளில் சுமந்தார். தாயின் நர்ஸ் பணியை தான் ஏற்று குடும்பத்தையும், சகோதரனையும் பார்த்துக் கொண்டார். அவர் வேறு யாருமில்லை, இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திரம் ரவீந்திர அனிருத் ஜடேஜா. தன் சகோதரியுடன் இன்றும் நெருக்கமாக அன்புடன் இருக்கிறார்.

image


ரவீந்திர ஜடேஜா, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர். பிறந்தது டிசம்பர் மாதம் 6-ம் தேதி குஜராத் நவகம் கேட் எனும் இடத்தில் 1988-இல். அப்போது ஜடேஜாவின் குடும்பம் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஜடேஜாவின் அம்மா லதா, அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார். அந்த காலத்தில் அவர் சம்பாத்தியத்தில் வீடு இயங்குவதை பலரும் வியப்பாக பார்த்தனர். ரவீந்திர ஜடேஜாவின் அப்பா அனிருத் ஜடேஜா, சரியான வேலை இல்லாமல் சின்ன சின்ன வேலைகளை செய்து குறைந்த வருமானத்தை மட்டுமே ஈட்டினார். 

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஜடேஜா, 10 வயதிருந்த போதே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தார். கிரிக்கெட் விளையாட தொடங்கிய அவரை, சீனியர் மாணவர்கள் கிண்டல் கேலி செய்வதும் வழக்கமாக இருந்தது. அதனால் தினமும் இரவு நேரங்களில் அழுவாராம் ஜடேஜா. மஹேந்திரசின்ஹ் செளஹான், இளம் கிரிக்கெட் வீரர்களை கோச் செய்யும் ஒரு விளையாட்டு வீரர். கிரிக்கெட் பங்களா என்ற இடத்தில் அவர் பயிற்சி அளிப்பார். ஸ்பின் பந்துவீச்சாளார்களுக்கு சிறப்பாக பயிற்சி தரும் அவர், பந்து வீசும்போது பிட்ச்சின் இடையில் ஒருவரை நிற்கவைத்து விட்டு, அவரின் தலைக்கு மேல் பந்தை வீச சொல்லி புதுவகை நுட்பத்தை கையாண்டு பயிற்சியளிப்பார். இவர்தான் ரவீந்திர ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியவர் என்றே சொல்லலாம். பயிற்சியில் கடுமையான கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கையாளுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரு சமயம், ஜடேஜாவின் முன் இரண்டில் ஒரு வாய்ப்பை தேர்வு செய்யும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. கிரிக்கெட் பங்களாவில் கிரிக்கெட் பயிற்சியை தொடருவது அல்லது ஆர்மி பள்ளிக்கு சென்று கல்வியை தொடர்வது என்று வந்தபோது, அவர் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தார். வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் தன் பயணாத்தை தொடங்கிய ஜடேஜா, பயிற்சியாளர் செளஹானின் அறிவுரையின் பேரில் பின்னர் இடதுகை ஸ்பின்னராக மாறினார். இரவு தூக்கத்தின் போது நடக்கும் பிரச்சனையை கொண்டிருந்த ஜடேஜாவை பலமுறை செளஹான் திட்டி அடித்துள்ளார். ஒரு மேட்சின் போது, பல ரன்களை ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டக்காரர் எடுத்தபோது, இடையில் கோச் செளஹான் அவரை மோசமாக விளையாடுவதற்காக பார்வையாளர்களுக்கு முன்பே கன்னத்தில் அறைந்தார். அடிவாங்கிய பின்னர் பந்துவீசிய ஜடேஜா, ஐந்து விக்கெட்டுகளை மேட்சின் இறுதிக்குள் எடுத்தார். 

கிரிக்கெட் மன்த்லி அறிக்கையில் பேசிய செளஹான்,

“நான் என் மாணவர்களை அடிப்பேன். பயிற்சி செய்யாமல் வெளியில் சுத்தினால் அடிப்பேன். வேடிக்கை பார்த்தால் அடிப்பேன். எனக்கு கிரிக்கெட் பங்களா, வீடு, படிப்பு இது மட்டுமே முக்கியம்,” என்றார்.

16 வயதாக இருந்தபோது, ஜடேஜா, 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் 2005-இல் விளையாடினார். அவர் 2008-இல் உலகக் கோப்பை போட்டியில் அதே இந்திய அணிக்கு துணை கேப்டனாகவும் இருந்தார். 

2006-07 இல் தன் முதல் மேட்சை துலீப் ட்ராபி போட்டியில் விளையாடினார். செளராஷ்டிரா அணியில் ரஞ்சி ட்ராபியும் விளையாடினார். 2012-ல் 23 வயதாக இருந்த ஜடேஜா, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையை படைத்தார். அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் மூன்று சதத்தை அடித்து, உலகின் எட்டாவது, இந்தியாவின் முதல் வீரராக சாதனை படைத்தார். டான் ப்ராட்மேன், பிரையன் லாரா, பில் பான்ச்ஃபோர்ட், வால்ட்டர் ஹம்மாண்ட், W.G.கிரேஸ், க்ரேம் ஹிக் மற்றும் மைக் ஹஸ்ஸி ஆகியோர் இந்த சாதனை பட்டியலில் இருந்தனர். 

2008-09 ரஞ்சி சீசனில் 739 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்தார் ஜடேஜா. அதன்மூலம் சர்வதேச விளையாட்டுகளில் விளையாட இந்திய அணியில் தேர்வானார். 60 ரன்கள் எடுத்த அவுட் ஆகாமல் இலங்கை எதிரான போட்டியில் விளையாடினார். பலமுறை இந்திய அணி வெற்றிபெறும் வகையில் தன் பங்கை சிறப்பான ஆல் ரவுண்டராக ஆடியுள்ளார். 2013 சேம்பியன் ட்ராபி போட்டியில் ஜடேஜா ஒரு முக்கியமான வீரராக உருவானார். அந்த போட்டியில் 12 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட் எடுத்த வீரரானார். ஆகஸ்ட் மாதம் 2013 நடைப்பெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலக நம்பர் ஒன் பவுலர் என்ற பெருமையை பெற்றார். இந்திய முன்னாள் வீரரான அனில் கும்ப்ளேவுக்கு பின் இந்த இடைத்தை பிடித்த இந்தியர் ஜடேஜா மட்டுமே. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரவீந்திர ஜடேஜாவை ஐபிஎல் போட்டிக்கு 2008-ல் ஜடேஜாவை வாங்கியது. 2013-ல் நடந்த டெஸ்ட் சீரீசில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்சில், இவர் அற்புதமாக விளையாடியதை அடுத்து, ரசிகர்கள் மத்தியில் இவரின் மதிப்பு ஏறியது. அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு ஒப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தங்களின் அன்பை தெரிவித்தனர். பலரும் இவரை கிண்டலடிக்கும் விதத்திலும் ட்வீட் செய்தனர். அதனையும் அவர் சந்தோஷமாகவே எடுத்துக்கொண்டார். 

Rediff பேட்டியில் பேசிய ஜடேஜாவின் சகோதரி,

ரவீந்திரா எனக்கும் என் இளைய சகோதரிக்கும், அப்பாவுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி தருவார். ஆனால் எல்லாவற்றையும் விட அவர் எங்கள் குடும்பத்துக்கு சேர்த்துள்ள பெருமையும், நாட்டையே பெருமைப்படுத்துவதுமே எங்களுக்கு மிகப்பெரிய பரிசு. எங்கள் ஊர் ஜாம்நகருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இரவும் பகலும் அவரின் வெற்றிக்காக ப்ரார்த்தனை செய்வோம். ஜடேஜா இன்னும் பல வெற்றிகளையும், பரிசுகளையும் கொண்டு வருவார் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. 

ரிவாபா சோலன்கியை ஏப்ரல் மாதம் 2016 இல் மணமுடிந்தார் ஜடேஜா. கோச்சின் கடுமையான பயிற்சி மற்றும் ஒழுக்கத்தோடு தொடங்கி இன்றளவும் தன் முழு முயற்சியையும் விளையாட்டில் செலுத்தி வெற்றிகளை கொண்டுவரும் ரவீந்திர ஜடேஜா வரும் ஆண்டுகளிலும் பல சாதனைகளை கிரிக்கெட்டில் படைப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

கட்டுரை: Think Change India