அம்மு டு அம்மா: செல்வி ஜெயலலிதா பற்றிய ஓர் நினைவலை!
அம்மு ஆக தோன்றி அம்மாவாக மறைந்த ஜெயலலிதா பல காரணங்களுக்காக பலரால் விமர்சிக்கப்பட்டாலும், அவரின் சவால் நிறைந்த வாழ்க்கை மற்றும் அவர் அடைந்த உயரம் மறக்கமுடியாதவை.
செல்வி ஜெயலலிதா இவ்வுலகை விட்டு மறைந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அவரை நம்பி தமிழகமே காத்திருந்த வேளையில் தீடிரென சில மாதங்களில் உடல்நலம் குன்றி தமிழக மக்களை விட்டுச்சென்ற அதிர்ச்சி இன்னமும் கூட அப்படியேதான் இருக்கிறது.
திரையிலும் நிஜத்திலும் மக்களின் மனதில் ஆட்சி செய்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா. மக்களின் பெருமதிப்பும் பக்தியும் தொடர்ந்ததால் முதலமைச்சரானதும் அம்மா என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். ஆண்கள் வரிசையாக நின்று அவரது காலில் சாஷ்டாங்கமாக விழும் (சர்ச்சைக்கு உள்ளானாலும்) அளவிற்கு மதிப்புவாய்ந்த ஒரே பெண் அரசியல்வாதியாக திகழ்ந்தார்.
ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டாலும், அதைத் தொடர்ந்து சிறைவாசம் சென்றாலும், எதிர்ப்பவர்களை வெற்றி கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செய்து வரும் தமிழக அரசியல் அரங்கில் நிலையாக கால் பதித்தவர். அவரது ஆதரவாளர்களும் கட்சியினரும் தெய்வத்தின் அவதாரமாக அவரை பார்க்கின்றனர். வயது வரம்பின்றி அம்மா என அன்பாக தமிழக மக்களால் அழைக்கப்படும் ’அம்மு என்கிற ஜெயலலிதா’ இன்று நம்மிடையே இல்லை.
மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உடல்நிலை, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக மோசமாகி சிகிச்சை பலனின்றி இவ்வுலகை பிரிந்தார்.
அம்முவிலிருந்து அம்மாவான அவரது பயணம் ஒரு பார்வை...
வெள்ளித்திரை
மைசூருவில் மாண்டியா எனும் ஊரில் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே தந்தையை இழந்தார். அதன் பிறகு பெங்களூரு சென்று பிஷப் காட்டன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் சிறிது காலம் படித்தார். பின்னர் அவரது தாய் வேதவல்லி அவரை சென்னைக்கு அழைத்து வந்தார்.
அவருக்கும் அவரது சகோதரருக்கும் சிறந்த படிப்பும் வாழ்க்கையும் அளிப்பதற்காகவே அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தார் சந்தியா என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட வேதவல்லி. சென்னைக்கு வந்த சந்தியா தமிழ் திரையுலகில் பகுதி நேர நடிகையானார். அம்மு என்று செல்லமாக தன் தாயாரால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா, அவர் மீது மிகுந்த அன்பை கொண்டிருந்தார்.
சுட்டிப்பெண்ணான ஜெயலலிதா பள்ளி காலத்தில் பன்முகத்திறமைசாலியாக திகழ்ந்து ஆசிரியர்களின் மனம்கவர்ந்த மாணவியாக இருந்தார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். பாரம்பரிய இசையிலும் மேற்கத்திய பாரம்பரிய பியானோவிலும் பயிற்சி பெற்றவர். மோஹினியாட்டம், மணிபூரி, கதக், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றவர்.
இவர் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1960-ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சிறந்த நடிகையாக, நடனக்கலைஞராக 140க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெயலலிதா. திரைப்படங்களில் நடிக்கும்போது ஆங்கிலத்தில் அவரது பெயரின் இறுதியில் ’a’ (Jayalalitha) எனும் எழுத்து ஒருமுறை தான் வரும். முதலமைச்சரான பிறகு நியூமராலஜி காரணங்களுக்காக அந்த எழுத்து ‘aa’ (Jayalalithaa) என மாற்றிக்கொண்டார்.
நடிகர் மற்றும் அரசியல்வாதியான குஷ்பு சுந்தர் ஜெயலலிதாவை பற்றி நமக்கு அப்போது அளித்த பேட்டியில்,
”கவர்ச்சியாகவும், அழகாகவும், அக்கால ஃபேஷனில் சிறந்து விளங்கிய அவர் ஒரு முழுமையான நடிகை என்று நான் நினைக்கிறேன். அவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தாலும் அவர் என்றுமே மக்களின் மனதை கவர்ந்த மாஸ் கதாநாயகி,” என்றார்.
எம்ஜிஆர் மற்றும் அரசியல் நடிகராக இருந்து அரசியல்வாதியானவரும், அவருடன் நடித்தவருமான எம்ஜிஆர்தான் ஜெயலலிதா அரசியலுக்கு நுழையக் காரணமானவராவார். அனுபவமிக்க வழிகாட்டியான அவரது மறைவிற்கு பின் ஜெயலலிதா தன்னை அவரது வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
1982-ல் எம்ஜிஆரால் துவங்கப்பட்ட ’அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில்’ சேர்ந்தார். 1991-ல் முதல் முறையாக முதலமைச்சரானார். எனினும் இவர் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் அல்ல. எம்ஜிஆர் மனைவியான ஜானகி ராமச்சந்திரனுக்குப் பிறகு இரண்டாவது பெண் முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார். ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அவர் வகித்த பதவி அமைப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் போன்றவற்றின் பின்புலத்துடன் 1996-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதால் ஜெயா தோல்வியுற்றார்.
2001-ம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்தார். 1991-1996, 2001-2006 மற்றும் 2011-2016 என மூன்று முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். ப்ளசெண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மற்றும் டான்சி நில வழக்கு போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் இரண்டு வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும் 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.
”இந்திய அரசியலில் மிகவும் வலிமையான பெண்களில் ஒருவர் ஜெயலலிதா. ஒரு சில முறை நேரில் சந்தித்து அவருடன் பழகவும், சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று அவர் ஒரு அடையாளச் சின்னம், ஒரு திறமையான நிர்வாகி, அரசியல்வாதி மற்றும் பல்லாயிர ரசிகர்களை கொண்டவர், என்றார் குஷ்பூ.
அஇஅதிமுக’ வின் உறுப்பினரான அறுபது வயது ராணி, எம்ஜிஆர் காலத்தில் கட்சியில் இணைந்தவர். அம்மா பற்றிய தனது நினைவுகளை பகிர்கையில்,
“எம்ஜிஆர் தலைமை வகித்த போது நான் கட்சியில் சேர்ந்தேன். ஆனால் ஒரு பெண் மனதில் உறுதியாக இருந்தால் எவ்வளவு தூரத்திற்கும் செல்லமுடியும் என்பதை எனக்குக் காட்டியவர் அம்மாதான்,” எனகிறார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்ளும் ராணி தூக்கத்தைக்கூட மறந்து தினமும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். அவருக்கு அம்மாவின் மேலுள்ள அன்பை அது வெளிப்படுத்துகிறது. இப்படி பல ராணிக்கள் அம்மாவாகிய ஜெ மீது அலாதி பாசம் கொண்டிருந்தனர் என்பதே உண்மை.
சர்ச்சைகள் மற்றும் ஆட்சி
2014-ல் ஆட்சியிலிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டப்பட்டதால், அலுவலகத்திலிருக்கும் தகுதியை இழந்தார். 2015-ல் வெள்ளம் வந்தபோது அரசு சாரா நிறுவனங்கள் நிவாரணமாக வழங்கிய உணவுப் பொட்டலங்களின் மேல் அதிமுக கட்சிப் பணியாளர்கள், ஜெயாலலிதாவின் புகைப்படத்தை ஒட்டினார்கள் என்றும் அப்போது அவர் நிலைமையை முறையாக கையாளவில்லை எனவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
எதிர்கட்சியினர் பல பிரச்சனைகளை கிளறிவந்தபோதும் 2016 சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்து மக்களிடையே தனக்கு இருக்கும் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் இந்த இரும்புப் பெண்மணி.
மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த போதும், பழைய புத்துணர்ச்சியும், வேகமும் இல்லாமல் பொலிவிழந்து காணப்பட்டார் அம்மா. அப்படியே ஒரு நாள் உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயா, இரண்டு மாத சிகிச்சைக்கு பின்பு, குணமாகி வராமல், மக்களை சந்திக்காமலேயே இவ்வுலகைவிட்டு மறைந்தார்.
அம்மாவின் தொண்டர்களுக்கு அவரின் இழப்பு பேரிடியாய் வந்தது. அதற்கு பின் நடந்த அரசியல் குழப்பங்கள், கட்சிப் பிளவு, என்று அதிமுக-வை ஒரு புரட்டுப்புரட்டிப் போட்டது. எப்படியோ ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும், எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பின் கட்சியை கட்டுக்கோப்பாய் வைத்திருந்த அம்மா இல்லாத பொதுத் தேர்தலை தமிழகம் சந்திக்கும் போதுதான் அவரின் இழப்பின் மதிப்பை கணிக்கமுடியும்.
அம்மு ஆக தோன்றி அம்மாவாக மறைந்த ஜெயலலிதா பல காரணங்களுக்காக பலரால் விமர்சிக்கப்பட்டாலும், அவரின் சவால் நிறைந்த வாழ்க்கை மற்றும் அவர் அடைந்த உயரத்தை பாராட்டாதவர்களே இருந்திரமுடியாது என்பதே நிதர்சனம்.