பொழுதுபோக்கை வணிகமாக மாற்றி வெற்றிகண்ட தொழில் முனைவர்கள்!
உங்களுக்கு பிடித்த விஷயத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பது மகிழ்ச்சியான அனுபவம். அவ்வாறு தங்களுக்கு ஆர்வமுள்ள பகுதியில் செயல்பட்டு வெற்றிகரமான வணிகமாக மாற்றிய 5 தொழில்முனைவோர்களின் பயணம் இதோ!
உங்களை தொழில்முனைவராக மாற்றக்கூடிய ஏராளமான வணிக யோசனைகள் இணையத்தில் உள்ளது. ஆனால் உங்களுக்கு ஆர்வமுள்ள பகுதியை நீங்கள் கண்டறியவேண்டியது முக்கியம். பலர் தங்களது பொழுதுபோக்கையும் பணியையும் ஒன்றாக இணைக்கின்றனர். தங்களுக்கு ஆர்வமுள்ள பகுதியில் மிகப்பெரிய வெற்றிகரமான வணிகங்களை உருவாக்குகின்றனர்.
எந்த ஒரு பொழுதுபோக்கையும் லாபகரமான வணிக முயற்சியாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை இந்த ஐந்து தொழில்முனைவர்களும் உணர்த்துகின்றனர். இவர்களது வெற்றிக்கதைகளைக் கொண்டு உங்களது ஆர்வத்தை எப்படி வணிகமாக மாற்றலாம் என நீங்களும் சிந்திக்கலாம்.
Qwerty Thoughts
புத்தகங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட கணவனும் மனைவியும் துவங்கிய வணிக முயற்சி இது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Qwerty Thoughts ஜஸ்லீன் குரானா, பிரதீக் குப்தா ஆகியோரால் நிறுவப்பட்டது. இது பல மொழிகளில் புத்தகங்களை வாசிப்பதற்கும் சுயமாக வெளியிடுவதற்கும் உதவும் ஆன்லைன் தளம். இதில் வாசகர்கள் புத்தகங்களைப் படிக்கும்போதே தங்களைப் போன்றே ஆர்வம் கொண்ட வாசகர்களுடன் கலந்துரையாடலாம்.
Qwerty Thoughts தளத்தில் ஒவ்வொரு புத்தகமும் ஒரு படிப்பறை போன்று செயல்படும். இங்கு வாசகர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு புத்தகத்தைப் படிப்பதுடன் அவர்களுடன் இணைந்து, கலந்துரையாடி ஒவ்வொரு பத்தி குறித்தும் நிகழ்நேர அடிப்படையில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
ஜஸ்லீன் டெல்லி என்சிஆர் பகுதியில் கதை சொல்லுதல், புத்தக வாசிப்பு, படைப்பாற்றலுடன்கூடிய எழுத்துகள் போன்றவை தொடர்பாக ஆஃப்லைன் குழுக்களை தொடங்கினார். அந்த சமயத்தில் இந்த சந்திப்புகளில் டெல்லி என்சிஆர் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் மட்டுமே பங்கேற்க முடிந்தது சவாலாக இருப்பதை உணர்ந்தார்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டும் ஜஸ்லீன், இத்தகைய சமூகத்தை ஆன்லைனில் ஒன்றிணைக்கத் தீர்மானித்தார். கணவர் பிரதீக் குப்தாவை இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இணைத்துக்கொண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் Qwerty Thoughts தொடங்கினார்.
2019-ம் ஆண்டு தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட Qwerty Thoughts Media Pvt Ltd அதன் ஆஃப்லைன் சமூகத்தை ஆன்லைனில் இணைத்துக்கொண்டது. அமெரிக்கா, யூகே, ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட 1,000 நூலாசிரியர்கள் இணைந்துள்ளனர். இந்த ஸ்டார்ட் அப் இந்தியாவில் வட்டார மொழியில் இணையத்தைப் பயன்படுத்தும் 500 மில்லியன் பயனர்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கும் சேவையளிக்கிறது.
இந்த தம்பதியின் சேமிப்பைக் கொண்டு Qwerty Thoughts தற்போது சுயநிதியில் இயங்கி வருகிறது. இவர்கள் இதுவரை ஆர்&டி, தொழில்நுட்பம், பிராடக்ட் டெவலப்மெண்ட், உள்ளடக்கம், நிகழ்வுகள், சட்டரீதியான தேவைகள் போன்றவற்றிற்காக 8 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
வாசகர்கள் புத்தகம் படிக்க இந்த ஸ்டார்ட் அப் கட்டணம் வசூலிக்கிறது. Qwerty Thoughts வழங்கும் விளம்பரப்படுத்துவதற்கான டூல்களையும் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள நூலாசிரியர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. இவையே இந்நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஆதாரம் ஆகும். இந்த ஸ்டார்ட் அப் கடந்த இரண்டு மாதங்களில் ஏற்கெனவே 50,000 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு இறுதியில் சிறப்பாக லாபம் ஈட்டும் என இணை நிறுவனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Qwerty Thoughts தளத்தில் 6,000-க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். 1,500-க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இவை காதல், த்ரில்லர், கற்பனை, கற்பனையல்லாத பிரிவு என பல்வேறு பிரிவுகளில் 1,000-க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட நூலாசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 40,000 முறை இந்தத் தளம் பார்வையிடப்படுகிறது. 2020ம் ஆண்டு இறுதியில் ஒரு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களை எட்ட விரும்புகிறது.
TrackMyPhones
பெங்களூருவைச் சேர்ந்த இரட்டையர்களான ஸ்ரீஹரி மற்றும் ஸ்ரீநிதி கரந்த் இருவரும் கணிணி பொறியாளர்கள். இருவருக்கும் வலைதளம் மற்றும் செயலி உருவாக்கத்தில் ஆர்வம் உள்ளது.
இவர்கள் வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றினாலும் நேரம் கிடைக்கும்போது செயலி உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். ஸ்மார்ட்போன் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டினர். இந்த யோசனைதான் TrackMyPhones ஸ்டார்ட் அப் தொடங்க உதவியது.
2014ம் ஆண்டு இது ஒரு பொழுதுபோக்காகவே தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் சகோதரர்கள் இருவரும் Thief Tracker என்கிற செயலியை உருவாக்கினர். இந்த செயலியானது யாரேனும் சாதனத்தை அன்லாக் செய்ய முயற்சி செய்து பலமுறை தோற்றுபோனால் ஸ்மார்ட்ஃபோனின் முன்புற கேமராவைக் கொண்டு படம்பிடித்து அதை பயனருக்கு மெயில் அனுப்பிவிடும்.
விரைவில் உலகளவில் செயலிக்கு வரவேற்பு கிடைத்ததை கவனித்தனர். இதுவே 2016-ம் ஆண்டு TrackMyPhones தொடங்க ஊக்குவித்தது.
அவர்கள் Thief Tracker செயலியின் புதிய வெர்ஷனை ‘Track My Phone’ என்கிற பெயரில் அறிமுகப்படுத்தினர். இது வலைதளத்தின் உதவியுடன் போன் இருக்கும் இடத்தை கண்காணிக்கும். சைரன் அடிப்பது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, அழைப்பது, ஜிபிஎஸ் இயக்குவது அல்லது முடக்குவது, தரவு இணைப்பு, வைஃபை போன்ற ரிமோட் கட்டளைகளை அனுப்பும்.
அதுமட்டுமின்றி திருட்டைத் தவிர்ப்பது, ரிமோட் மூலம் கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்படுத்தும் அம்சம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் 20 செயலிகள் இந்நிறுவனத்திற்கு உள்ளன.
செயலிகள் மற்றும் வலைதளம் உருவாக்குவதில் ஆர்வம் இருந்ததால் இந்த நிறுவனர்கள் இந்நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அத்துடன் இதற்காக வெளியிலிருந்து நிதி திரட்டவேண்டிய அவசியமில்லை. பெரியளவிலான குழுவும் அவசியமில்லை. இப்போதும் மாதாந்திர செயல்பாட்டு செலவு 35,000 ரூபாய்க்கு மிகாமல் இந்த இரட்டை சகோதரர்கள் மட்டுமே இந்நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிறுவனம் லாபகரமாக இயங்கி வருகிறது. செயலிகளில் காணப்படும் விளம்பரங்கள் வாயிலாக வருவாய் ஈட்டுகிறது. பயனர்களுக்கு அனைத்து செயலிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதம் வரை இருவரும் அவர்களது பணியைத் தொடர்ந்தவாறே TrackMyPhones நடத்தி வந்தனர். எனினும் தற்போது இவர்கள் முழு நேரமாக புதிய செயலிகளை உருவாக்குவதிலும் வணிக மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இறுதி பயனர்களுக்காக தொடர்ந்து புதுமையான செயலிகளை உருவாக்க உள்ளதாகவும் நிலையான வருவாய் ஈட்ட பி2பி பிரிவில் செயல்பட உள்ளதாகவும் யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் ஸ்ரீஹரி தெரிவித்தார்.
BiziBean
உங்களுக்கு காபி பிடிக்குமானால் டெல்லியைச் சேர்ந்த BiziBean நிறுவனத்தின் நிறுவனர்கள் போன்றே காபி பிரிவில் தொழில்முனைவராக செயல்படலாம்.
BiziBean 2014-ம் ஆண்டு அஹர்னிஷ், ராஜ் சிங், மணிதீப் சோக்ரா ஆகியோரால் நிறுவப்பட்டது. இங்கு உள்ளூரில் வாங்கப்பட்ட காபி கொட்டைகள் வறுக்கப்பட்டு, தேவையான அளவுகளில் கலக்கப்பட்டு காபி தயாரித்து வழங்கப்படுகிறது. உங்களுக்கு காபியின் சுவை பிடித்திருந்தால் BiziBean காபியை வீட்டிற்கும் வாங்கிச் செல்லலாம்.
2004-ம் ஆண்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டது. மணிதீப், அஹர்னிஷ் இருவரும் தங்களுக்கு விருப்பமான காபி பிரிவில் செயல்படுவதற்காக தங்களது கார்ப்பரேட் பணியை விட்டு விலகினர். ஆர் & ஜி (ரோஸ்ட் & கிரௌண்ட்) காபி பிரிவில் பி2பி வணிகத்தைத் தொடங்கினார்கள்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு இருவரும் சில்லறை வர்த்தக பிரிவில் ஸ்பெஷாலிட்டி காபி சந்தையில் இடைவெளி இருப்பதை உணர்ந்து இந்தப் பகுதியில் செயல்படத் தீர்மானித்தனர். ஃப்ரெஷ்ஷாக வறுக்கப்பட்ட, பல வகையான கலவைகளில் கிடைக்கக்கூடிய காபியை சுவைத்துப் பார்த்து தேர்வு செய்யும் வசதி சந்தையில் இல்லை என்பதை உணர்ந்து இந்தப் பகுதியில் சேவையளிக்க விரும்பினர்.
இதுவே மற்றொரு நண்பர் மற்றும் காபி பிரியரான ராஜுடன் இணைந்து 2014-ம் ஆண்டு ஆரம்ப முதலீடாக 5 லட்ச ரூபாயுடன் BiziBean தொடங்க ஊக்குவித்தது.
கடந்த ஐந்தாண்டுகளில் BiziBean டெல்லி என்சிஆர் பகுதியில் 11 அவுட்லெட்களாகவும் மூன்று ஸ்டோர்களாகவும் இந்தியா முழுவதும் உள்ள 13 நகரங்களில் பிவிஆர் சினிமாஸ், ஸ்பென்சர் ரீடெயில், மாடர்ன் பஜார் போன்ற இடங்களில் 37 ஸ்டால்களாகவும் விரிவடைந்துள்ளது. நேரடியாக சென்று வாங்கும் வகையில் ஸ்டோர்களில் மட்டுமின்றி இந்நிறுவனம் அதன் வலைதளம் வாயிலாகவும் காபி விற்பனை செய்கிறது. கடந்த நிதியாண்டில் இந்த பிராண்ட் சுமார் ஒரு மில்லியன் கப் காபிகளை விற்பனை செய்துள்ளது.
BiziBean 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அதன் அவுட்லெட்களை இரட்டிப்பாக்கி 80 அவுட்லெட்களில் செயல்படவும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 150 அவுட்லெட்களாகவும் செயல்பட திட்டமிட்டுள்ளது. அதன் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும் வகையில் வெளியிலிருந்து நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
Make It Happen
பயணம் என்பது மக்களிடையே வழக்கமாக காணப்படும் ஒரு பொழுதுபோக்கு. ஆனால் எத்தனை பேர் அதை வணிகமாக மாற்றி வெற்றி பெறுகின்றனர்? 34 வயதான மரியா விக்டர் பிரபல கடற்கரை பகுதியான கோவாவின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கத் தீர்மானித்தார்.
மரியா பெங்களூருவில் இருந்தபோது 2014-ம் ஆண்டு மேக் இட் ஹேப்பன் தொடங்கினார். பின்னர் கோவா மாற்றலாகிச் சென்றார். Make It Happen நிறுவனம் கோவா குறித்த சிறப்பான புரிதல் கொண்ட உள்ளூர் தொகுப்பாளர்களைக் கொண்டு நடைபயணம் மற்றும் பாரம்பரிய அனுபவங்களை வழங்குகிறது.
மேலாண்மை கணக்காளரான மரியா 2005-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பிறகு கோவாவில் இருந்து மாற்றலாகி பெங்களூரு சென்றார். பின்னர் பணி நிமித்தமாக மும்பைக்கும் துபாய்க்கும் சென்றார் 2014-ம் ஆண்டு பெங்களூரு திரும்பியபோது முழு நேரமாக ஸ்டார்ட் அப் துவங்க தீர்மானித்தார்.
இவர் கார்ப்பரேட் பணியில் இருந்தபோது இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு மலையேற்றமும் சிறு பயணங்களும் மேற்கொண்டுள்ளார். இதனால் பல சமூகங்களுடனும் கலாச்சாரங்களுடனும் இணையும் வாய்ப்பு கிடைத்தது. ஓராண்டில் இதுதான் தனக்கான பகுதி என்பதை உணர்ந்தார்.
2014-ம் ஆண்டு முழு நேரமாக ஈடுபட்டார். ஓராண்டிற்குப் பிறகு கோவா பிராஜெக்டைத் தொடங்கினார். அப்போதிருந்து கோவாவை மட்டுமே மையமாகக் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்தினார்.
சிறந்த அனுபவத்தைப் பெற ஒரு நபருக்கு 700 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை ஆகும். இதற்கான அவகாசம் இரண்டு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை ஆகும். இந்த பயணத்தில் உள்ளூர் மக்கள் தங்களது கலாச்சாரத்தை பகிர்ந்துகொள்வார்கள். இதனால் இந்த சமூகம் குறித்த சிறந்த அனுபவம் கிடைக்கும். இந்நிறுவனத்திற்கு இதுவரை 5,000-க்கும் அதிகமான புக்கிங் கிடைத்துள்ளது. வெற்றிகரமான வணிகமாக செயல்பட்டு வருகிறது.
Vowelor
கொல்கத்தாவில் உள்ள புத்திசாலிகள் அடங்கிய குழு ஒன்று Neitzsche குறித்து விவாதித்துக்கொண்டிருக்கலாம். அல்லது கல்லூரி மாணவர்கள் மரியன் கீஸ் நாவல்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கலாம். இப்படி புத்தக வாசிப்பில் அனைத்தையும் புக் க்ளப் கொண்டாடுகிறது.
ஆனால் காலம் செல்லச் செல்ல புக் க்ளப் வளர்ச்சியை சந்தித்தது. நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் உலகில் மட்டுமே சாத்தியப்பட்ட ஷயங்கள் இன்று மெய்நிகர் பகுதியிலும் வெற்றியடைந்து வருகிறது.
புத்தக விரும்பிகளை மெய்நிகர் புத்தக சமூகத்தில் ஒன்றிணைக்கிறது டெல்லியைச் சேர்ந்த Vowelor. நண்பர்களான 27 வயது மனிக் கௌரி, 26 வயது லலித் ஷர்மா இருவருமே புத்தகங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் நிறுவிய Vowelor ஸ்டார்ட் அப், வாசகர்கள் ஒருவரோடொருவர் இணைப்பை ஏற்படுத்தி விவாதிக்க உதவுகிறது.
Vowelor வளர்ந்து வரும் நூலாசிரியர்கள் தங்களது வெளியீடுகளை காட்சிப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் உதவும் தளமாக விளங்குகிறது. மனிக், லலித் இருவருக்கும் புத்தகங்களின் மீதிருந்த ஆர்வமும் அவர்களது பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு ஒரு சமூகத்தை உருவாக்குவதில் இருந்த ஆர்வமுமே Vowelor முயற்சியை 2016-ம் ஆண்டு ஒரு முகநூல் பக்கமாகவும் முகநூல் சமூகமாகவும் தொடங்க உந்துதலளித்தது.
ஓராண்டிற்குப் பிறகு இரண்டு தளங்களிலும் உலகம் முழுவதும் இருந்து 80,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். இந்த அபார வரவேற்பைக் கண்டு இருவரும் தங்களது பணியை விட்டு விலகி Vowelor Books & Media நிறுவனத்தை 2017-ம் ஆண்டு நிறுவினர். தற்போது வலைதளமாகவும் ஆண்ட்ராய்ட் செயலியாகவும் கிடைக்கக்கூடிய Vowelor தளத்தில் 5,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்கள் உள்ளன. விரைவில் ஐஓஎஸ் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷ்னி | தமிழில்: ஸ்ரீவித்யா